குஜிலியம்பாறை : சி.அம்மாபட்டி இந்திரா காலனி மக்கள் பயன்பாட்டிற்கு பாதை வசதி இல்லாததால், பள்ளி மாணவ,மாணவிகள் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளி செல்கின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னுலுப்பை ஊராட்சி சி.அம்மாபட்டியில் தெற்கே இந்திரா காலனி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் காலனி அமைந்துள்ள குடியிருப்புக்கும், சி.அம்மாபட்டி ஊருக்கும் இடையே கடந்த 1988ம் ஆண்டு ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இதனால் இக்காலனி மக்கள் நடந்து செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாமல் போனது. காலனி மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், வேலை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கும், ரேசன்கடை செல்வதற்கும், பள்ளி, அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் சி.அம்மாபட்டி செல்வதற்கு ரயில்வே தண்டவாளப் பாதையை தாண்டி சென்று வருகின்றனர். மேலும் இக்காலனி மக்கள் இறப்பு நிகழ்வின் போது, உடலை சுமந்து தண்டவாளத்தை கடந்து தான் சி.அம்மாபட்டி சுடுகாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு கடந்து செல்லும் போது ரயில் எப்போது வரும் என தெரியாத நிலை உள்ளதால், ஒருவித உயிர் பயத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் பள்ளிக் குழந்தைகளும் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து தான் சி.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். இக்காலனி குடியிருப்பை ஒட்டியவாறு உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா விவசாய காட்டில் நடந்து சென்றும், போக்குவரத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு பட்டாதாரர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பாதை வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் இக்காலனி மக்களுக்கு முறையான பாதை வசதி கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். பார்வையிட்டதோடு சரி, இதுவரை பாதை வசதிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே சி.அம்மாபட்டி காலனி மக்கள் பயன்பாட்டிற்கு நிரந்தர பாதை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….