மதுரை, ஜன.23: மதுரை மாவட்டத்தில் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யபட்டு வருகின்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட குறுகிய கால நெல் ரகங்கள் ஏடிடி 45, ஏஎஸ்டி 16, கோ 51, ஏடிடி 53 ஆகியவை குறுவை சாகுபடிக்கு ஏற்றவை. பெரும்பாலான நெல் வயல்களில், தண்ணீர் தொடர்ந்து தேக்கி வைக்கப்பட்டு சாகுபடி செய்வதினால் பாசிகள் உருவாகி வயல் முழுவதும் பரவி விடுகின்றன. இதனால் மண்ணில் காற்றோட்டம் தடைபடுகிறது. நுண்ணுயிரிகள் செயல்பாடுகள் குறைந்து ஊட்டச்சத்துகள் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதை தடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ காப்பர் சல்பேட்டை மணலுடன் கலந்து நெல் வயலில் பரவலாக தூவி விடவேண்டும். அல்லது 2 கிலோ காப்பர் சல்பேட்டை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பு நனையும்படி தெளித்து பாசிகளை கட்டுப்படுத்தலாம் என மதுரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.