ஊட்டி, செப்.30: கஞ்சா மற்றும் குட்கா, போதை பாக்கு, பான்பாரக், பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. போதை பொருள் ஒழிப்புக்கான சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. எல்லையோர மாவட்டமான நீலகிரிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர, ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து காவல்துறை நடவடிக்கைக்கு பின் அதில் இருந்து விலகி இருப்பவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட எஸ்பி நிஷா நேற்று ஊட்டி நகரில் பழைய கஞ்சா குற்றவாளிகள் தொடர்பாக நேரடியாக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பழைய குற்றவாளிகள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் விசாரித்தார். இந்த ஆய்வின் போது ஊட்டி டவுன் டிஎஸ்பி யசோதா, ஊட்டி டி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.