திருச்செங்கோடு, ஜூன் 22: திருச்செங்கோடு நகராட்சியில், மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் மற்றும் போதை தரும் மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம், சுகாதார மேற்பார்வையாளர்கள் அருள்முருகன், கலைசிவன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சந்தேகத்திற்குரிய காலாவதியான மிட்டாய் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நகரில் 4 இடங்களில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிமீறல்களுக்காக ₹10,500 அபராதம் விதிக்கப்பட்டது. நகர் பகுதியில் பள்ளி சிறார்களுக்கு போதை தரும் மிட்டாய் வகைகள், புகையிலை தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நபர்கள் மீது ₹1 லட்சம் அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் சேகர் எச்சரித்துள்ளார்.