பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி காவிரி ஆற்றங்கரையில் அப்பகுதி விவசாயிகள், தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் திடீரென மாயமாகின. பாதிக்கப்பட்ட விவசாயிகள், அங்குள்ள முனியப்பன் கோயில் சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை ஆய்வு செய்ததில், 2 பேர் ஒரு டூவீலரில் வந்து ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இதில், ஆயக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனும், அவனது கூட்டாளியும் சேர்ந்து ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவனது கூட்டாளியை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், மீண்டும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், டூவீலரில் செல்லும் ஒரு நபர் ஆற்றங்கரையிலிருந்து ஆட்டு குட்டியை திருடிச்சென்றது பதிவாகியுள்ளது. எனவே, போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு, ஆடு திருடர்களை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….