அருப்புக்கோட்டை, செப்.14: அருப்புக்கோட்டையில் பல் வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டி பலியானார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி திருக்குமரன் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி லீலாவதி (65). பல் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பல்லை பிடுங்கிவிட்டு புதிய பல் கட்டியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து வலி இருந்துள்ளது. நேற்று முன்தினம் வலி அதிகமாகவே மெடிக்கல்லில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். பின் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து லீலாவதியை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீலாவதி இறந்தார். இதுகுறித்து கணேசமூர்த்தி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.