வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை சில வாரங்களாக கடும் வெப்பம் தகித்து வருகிறது. இந்நிலையில் அங்கு அடிக்கடி ஏற்பட்டு வரும் காட்டுத் தீ நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவதும் பின்பு அணைக்கப்படுவதும் இயல்பு தான் என்ற போதும் இந்த ஆண்டில் மிக அதிக அளவில் காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன. அம்மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் பெரும் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்ட நிலையில், சான் பெர்னாண்டினோ கவுண்டி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, வறண்ட வானிலை வேகமான காற்று எதிரொலியாக மளமளவென பரவி வருகிறது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு அமெரிக்க வனப்பாதுகாப்பு குழுவினரும், சான் பெர்னாண்டினோ நகர தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ பிற இடங்களுக்கு பரவாமல் தடுத்துவிட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தீ இதுவரை முற்றிலுமாக அணைக்கப்படவில்லை. காட்டுதீ கட்டுக்குள் வரவில்லை என்றால் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியே தண்ணீரை கொட்டி நெருப்பை அணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்….