சாயல்குடி, ஜூன் 20: கடலாடி அருகே பலத்த காற்றிற்கு மரங்கள் சாய்ந்து ஓட்டு வீடு சேதமடைந்தது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் கோடை மழை பெய்து வருகிறது. கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடலாடி பகுதியில் நேற்று மாலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய சிறு தூரல் பெய்தது. அப்போது ஆப்பனூர் தெற்கு கொட்டகை, காளிகோயில் கொட்டகை, அரியநாதபுரம், மங்கலம் போன்ற கிராம பகுதிகளில் பலத்த சூரை காற்று வீசியது.
இதற்கு தெற்கு கொட்டகை பகுதியில் வேப்பமரங்கள் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. இதில் தெற்குகொட்டகை வில்வத்துரையின் வீட்டின் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேறோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் ஓடுகள், மற்றும் பொருட்கள் சேதமடைந்தது. வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு வழங்க கூடிய இழப்பீடு தொகை வழங்கவும், வீடு சேதமடைந்து விட்டதால் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டி தர வேண்டும் என வில்வத்துரை குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.