நாகப்பட்டினம், டிச.12: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை தோறும் அனுசரிக்கப்படும் விரதமாகும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சோமவார விரதம் இருப்பது வழக்கம். கார்த்திகை மாத 1வது சோமாவாரத்தில் விரதம் தொடங்கிக் கடைசி சோமவாரத்தன்று முடிக்க வேண்டும்.
இந்தாண்டுக்கான கார்த்திகை மாத கடைசி சோமவாரம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகள் அடுக்கப்பட்டு, அதில் புனித நீர் நிரப்பப்பட்டு புஷ்பங்கள் வைக்கப்பட்டன.பின்னர் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து காயாரோகண சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.