வேலூர், நவ.21: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வில் தவறிய மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறுதேர்விலும் பழைய வினாத்தாளே வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 74 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பருவத்தேர்வு தொடங்கியது.
இதில் முதுநிலை கணிதவியல் துறையின் 3ம் ஆண்டுபருவத்தேர்வில், 2021ல் வெளியான வினாத்தாள்கள் அப்படியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. முதுநிலை கணிதவியல் 2ம் ஆண்டு ‘ரியல் அனலைசிஸ்’ பாடத்தில் தவறிய மாணவர்களுக்கு கடந்த வாரம் நடந்த மறுத்தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளை ஒத்து இருப்பதாகவும், மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் இருந்து புகார் கிளம்பியுள்ளது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் இத்தகைய குளறுபடிகள் குறித்து அரசின் உயர்கல்வித்துறை முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.