கோவை, மே 21: கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த நடக்க முடியாத மாற்று திறனாளி தமிழ்செல்வி (55) என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு திருமணம் ஆகவில்லை. என் அப்பா, அம்மா ஆதரவில் இருந்ேதன். அவர்களின் காலத்திற்கு பின்னர் நான் தனியாக இருக்கிறேன், எனக்கு அண்ணன் இருக்கிறார். என் பூர்வீக வீட்டில் இருந்த போது என்னை விரட்டி விட்டார்கள். ரோட்டிற்கு வந்து விட்டேன். எனக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வருகிறது. இந்த பணத்தில் தான் நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு வீடு இல்லாததால் ரோட்டில் தங்க முடியாமல் தவிக்கிறேன். என் அப்பா, அம்மா இருந்த வீட்டில் நான் இருக்க அனுமதிக்க வேண்டும். என்னை வீட்டை விட்டு வெளியேற்றியதால் நான் மழை வெயிலில் ஆதரவின்றி கிடக்கிறேன், கலெக்டரிடம் சொல்லி எனக்கு உதவி கேட்க வந்தேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கோவைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த கிரி (48) என்பவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்தார். அவர் கூறுகையில், ‘‘ நான் பூ கட்டி வியாபாரம் செய்கிறேன். எனக்கு 4 சகோதரிகள் உள்ளனர். எனக்கு திருமணம் ஆகவில்லை. என் அம்மா மற்றும் மாற்று திறனாளி சகோதரி ஒருவரை நான் கவனித்து வருகிறேன். நான் பிறந்தது முதல் என்னால் நடக்க முடியவில்லை. மிகுந்த கஷ்டத்தில் மூன்று சக்கர சைக்கிளில் சென்று வேலை செய்து வந்தேன். அந்த சைக்கிள் பழுதாகி விட்டது. பேட்டரி மொபட்டை மாற்று திறனாளிகள் நலத்துறையிடம் கேட்டேன். அது கிடைக்கவில்லை, கலெக்டரை சந்தித்து கேட்க காத்திருக்கிறேன், ’’ என்றார்.