கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இங்கு கடும் போட்டி நிலவிய நிலையில் கடந்த 5ம் தேதி நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஒரு வார்டை தவிர மற்ற 11 வார்டுகளிலும் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 1, 2, 11 ஆகிய வார்டுகளின் திமுக வேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து விவகாரம் தொடர்பாக சுயேச்சைகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார், 3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதுகுறித்த அறிவிப்பையும் அலுவலகத்தில் ஒட்டினார். இது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கிடையே வேட்புமனு வாபசுக்கு நேற்று கடைசி நாள் என்பதால், ஒருவர் மட்டும் வாபஸ் பெற்ற நிலையில், சர்ச்சைக்குள்ளான 3 வார்டுகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல், மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் கடம்பூர் பேரூராட்சியை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமாரின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடம்பூர் பேரூராட்சியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்வதாக நேற்று நள்ளிரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. …