நீடாமங்கலம் : உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற பயறு ஒண்டரை பயன்படுத்தி அதிகமகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: காவிரி டெல்டா விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை மார்கழி தை பட்டத்திலும், நெல் தரிசில் விதைத்துள்ளனர். இதில் வம்பன் 8 மற்றும் ஆடுதுறை 5 என்ற உளுந்து ரகங்களும், கோ 8 என்ற பச்சை பயறு ரகங்களையும் விவசாயிகள் ஆங்காங்கே விதைத்துள்ளனர். தற்போது பயறுவகை பயிர்கள் 30 32 நாட்கள் அதாவது பூ பூப்பதற்கு முந்தைய பருவத்தை அடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு இலை வழியாக 2 சத டி.ஏ.பி கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்டி.ஏ.பிஐ பூ பூக்கும் தருணத்திலும், அதில் இருந்து 15 நாட்கள் கழித்து இரண்டாவது தெளிப்பு கொடுக்க வேண்டும் (அல்லது) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு ஒண்டர் (பயறு அதிசயம்) ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ பூ பூக்கும் தருணத்திலும் அதில் இருந்து 15 நாட்கள் கழித்து இரண்டாவது தெளிப்பு கொடுக்க வேண்டும். பயறுவகைப் பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் 2 சத பொட்டாசியம் குளோரைடு அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு உபயோகிக்கலாம். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயறு ஒண்டர் விற்பனைக்கு தயாராக உள்ளது.மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் துரை நக்கீரன் 93602 47160 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….