நெய்வேலி : குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மண் புழு தயாரிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017 – 2018 கீழ், ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை வெங்கடாம்பேட்டை சந்தை தோப்பு அருகில் அமைக்கப்பட்டது.இந்த கூடம் கட்டப்பட்டு கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் கடந்தும் இதுநாள் வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் மக்கி வீணாகி வருகிறது. கொட்டகையை சுற்றி புதர் மண்டி கிடப்பதால், கழி மற்றும் தென்னை கீற்றுகள் மக்கி விஷப் பூச்சிகளின் உறைவிடமாக மாறியுள்ளது. உரக்கிடங்கினுள் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மக்கள் வரிப்பணம் ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மண்புழு தயாரிப்பு கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….