பயங்கர சத்தத்துடன் டிரைவர் வீட்டில் தீ

 

மேட்டூர், மார்ச் 19: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் மேட்டுகாவேரிபுரத்தை சேர்ந்தவர் குமார் (29) லாரி டிரைவர். இவரது மனைவி கடந்த 16ம் தேதி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அன்றைய தினம் இரவு குமார் மட்டும் வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று முன்தினம் (17ம்தேதி) அதிகாலை வேளையில், பயங்கர சத்தம் கேட்டுள்ளது. உடனே குமார், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரல் மற்றும் அட்டை மேற்கூரையின் உள்பகுதியில் இருந்த தென்னங்கீற்று எரிந்து கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்து, அந்த தீயை அணைத்தனர். திடீரென பயங்கர சத்தத்துடன் எப்படி தீ பிடித்தது எனத்தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். பின்னர், மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் (பொ) அழகுராணி ஆகியோர் வந்து, தீ பிடித்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரேனும் குமாரின் வீட்டிற்கு வந்து தீ வைத்து சென்றார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. காரணம், அந்த இடத்தில் ஒரு சிகரெட் துண்டு மட்டும் கிடந்துள்ளது. வேறு பொருட்கள் ஏதும் இல்லை. இச்சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்