நெல்லை, செப். 26: கடலூர், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (58). தென்காசியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் பில் போடும் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கமாக நெல்லை, சந்திப்பு பகுதியில் உள்ள பிரபலமான லாட்ஜில் தங்கியிருந்து வேலைக்குச் செல்வார். அவரது அறைக்கு அருகே உள்ள செல்போன் சர்வீஸ் கடையின் உரிமையாளரான தஞ்சாவூர், கீழவாசல், ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்த அக்பர் அலி (34) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபால் சாப்பிடும் போது அக்பர் அலியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அக்பர் அலி, ஜெயபாலை கீழே தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் ஜெயபாலுக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அக்பர் அலியை நேற்று கைது செய்தனர்.