பண்டிகை காலங்களில் பால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தல்

சென்னை: பண்டிகை காலங்களில், அனைத்து நுகர்வோர்களுக்கும் தேவைக்கேற்ப பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தியுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சென்னை பெருநகர  மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் கார்த்திக், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுப்பையன், ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மொத்த விற்பனையாளர்களின் கருத்து மற்றும் குறைகளை கேட்டு அதனை விரிவாக விவாதித்தார். பின்னர் கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில்: பால்  உற்பத்திக்கு தேவைப்படும் ஆட்கள் அமர்த்துதல் மற்றும் பால் பாக்கெட்டுகளை அடுக்கும் டப்புகள் குறைவின்றி இருப்பு வைப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பிற மாவட்ட ஒன்றியங்களான விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து  பால் உரிய  நேரத்திற்கு வருவதையும் அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைவதையும் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத பால் விற்பனையை இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பீடு செய்து குறைந்த விற்பனை மேற்கொண்ட, மொத்த பால் விற்பனையாளர்களை பால் விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள எதிர்வரும் பண்டிகை நாட்களில்  அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டு, கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை