தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, திரிசூலம் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் அவரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சிட்லபாக்கம் ராஜேந்திரன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என அப்பகுதியில் உள்ள கோயிலில் இளைஞர்கள் பிரார்த்தனை செய்து, 108 தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். இதையடுத்து வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிட்லபாக்கம் ராஜேந்திரன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழை எளிய மக்களுக்காக இயங்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான், விரைவில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதேபோல், இந்த பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதி மக்கள் தொழில் செய்ய ஒரு நல்ல சூழலை ஏற்படுத்துவேன்,’ என்றார். பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்….