புதுடெல்லி:நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. அதில், 8ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. கடந்த வியாழன்று சோனியா காந்திக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் நேற்று அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் சட்டத்தை மதிக்கும் கட்சியாகும். நாங்கள் விதிமுறைகளை பின்பற்றுவோம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. 2002ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை அமித் ஷா ஓடிக்கொண்டு இருந்தார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்’’ என்றார். இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராக சோனியா 3 வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே வழக்கில், வரும் 13ம் தேதி ராகுல் அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. …