புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கடந்த ஜூன் 1ம் தேதி அமலாக்கத்துறை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. ஜூன் 2ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இருப்பினும் ஜூன் 8ம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என மருத்துவர் சான்றிதழ்களுடன் சோனியா தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திவுள்ளதால் இவ்வழக்கில் ஆஜராக 3 வார கால அவகாசம் கேட்கப்பட்டது.இந் நிலையில், 3 வாரம் ஆன நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் நேற்று மீண்டும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் 5 நாட்களில் சுமார் 50 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. …