சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே நேற்று அதிகாலை 2 பேர் மின்னல் வேகத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதை கவனித்த அண்ணா சதுக்கம் போலீசார் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை பின் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் அஷ்ரப் (20) என்றும், மற்றொரு வாலிபர் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் துறையில் படித்து வரும் மாணவன் கார்த்தி (19) என்றும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 வாலிபர்கள் மீதும் ஐபிசி 294(பி) (ஆபாசமாக பேசுதல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 308 (மரணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்கள் பைக்ரேசிற்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….