நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா நேற்று காலை நடந்தது. துணைவேந்தர் பிச்சுமணி வரவேற்றார். விழாவிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து 204 பேருக்கு தங்க பதக்கங்களையும், 1170 பேருக்கு பிஎச்டி பட்டம் என மொத்தம் 1,374 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவின் மூலம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 527 பேருக்கு இளங்கலை, முதுநிலை, எம்பில், பிஎச்டி, தன்னாட்சி கல்லூரிகள், தொலை தூரக் கல்வி இயக்கம் என பட்டங்கள் வழங்கப்பட்டது. பட்டங்களை வழங்கி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரம்பரிய கல்வி, நவீன காலத்தில் வந்துள்ள மாற்றங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் பெரிய கனவு காணுங்கள். கடின உழைப்பின் மூலம் குறிக்கோளை எட்ட வேண்டும். அதற்காக சுய கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது. சுவாமி விவகோனந்தர் கூறியது போன்று எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நிற்கக் கூடாது. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். முன்னதாக தமிழில் பேசத் தொடங்கினார். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருவனந்தபுரம் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் அஜய கோஷ் ஆகியோர் பேசினர். * பிஎச்டி பட்டம் பெற்ற 73 வயது முதியவர்கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே புதூரைச் சேர்ந்த தங்கப்பன் என்ற 73 வயது முதியவர் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கவர்னர்ஆர் என். ரவியிடம் பி.ஹெச்டி பட்டம் பெற்றார். ‘‘காந்திய தத்துவம் இன்றைய பயங்கரவாதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்ற தலைப்பில் குற்றாலம் பராசக்தி கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் கனகம்மாள் என்பவரை வழிகாட்டியாகக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக பயின்று இந்த பிஎச்டி பட்டத்தை பெற்றுள்ளார். திருமணமாகாதவர். எம்ஏ வரலாறு, எம் எட்., எம்.பில்., பிஏஎல் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். குமரி மாவட்டம் திற்பரப்பு, மண்டைக்காடு அறநிலையத்துறை கோயில் மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்வி பயில வயது தடை கிடையாது. வாழ்ந்து முடிக்கும் வரை கற்றுக்கொண்டே இருக்கலாம். காந்திய சிந்தனைகள் இன்றைய இளையதலைமுறையினருக்கு அவசியம் தேவை என்றார்….