நெல்லை: மதுரையை சேர்ந்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று நெல்லை வந்தனர். பின்னர் அவர்கள் 2 குழுவாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஒரு குழுவினர் நெல்லை டவுன் கல்லணை தெருவை சேர்ந்தவர் சதாம்உசேன் என்பவரது வீட்டில் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சதாம் உசேன், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டுக்குள் வெளிநபர்கள் செல்லாமல் தடுக்க கதவு பூட்டப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு நெல்லை டவுன் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுபோல் பாளை செயின்ட் பால்ஸ் சாலையில் உள்ள ராஜ்குமார் என்பவரது வீட்டில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜ்குமாரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதையொட்டி அங்கு பாளை பெருமாள்புரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத வெளிநாட்டு பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் அமலாக்க துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….