ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மாநகராட்சியின் நுண் உரம் தயாரிக்கும் மையத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி வைராபாளையம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் உலர் கழிவுகளை எரியூட்டும் இரண்டு கட்டமைப்புகளை பார்வையிட்டார்.
இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சியின் குப்பை கிடங்கினையும் பார்வையிட்டார். முன்னதாக ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன காய்கறி மார்க்கெட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகர பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.