சென்னை: நீல்சன் ஐக்யூ நிறுவனத்தின் சென்னை கிளையை திறந்து வைத்து, கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2019 – 20ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதற்கட்டமாக 5 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, தொழிற்சார்ந்த அமைச்சர், செயலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நீல்சன் ஐக்யூ நிறுவனத்தின் சென்னை கிளையை முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீல்சன் ஐக்யூ நிறுவனத்தின் உயரதிகாரிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டி பேசினர். தொடர்ச்சியாக, திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாரியாக செயல்படும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை மர்லிமா என்பவரை சிறப்பிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் 2022ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். …