பெரணமல்லூர், ஆக. 3: பெரணமல்லூர் அருகே நேற்று நடைபெற்ற நீலவேணி அம்மன் ஆடி பிரமோற்சவ தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முன்னிட்டு கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. விழாவில் தொடர்ந்து அன்னவாகனம், ரிஷபவாகனம், அனுமந்தவாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 8மணிக்கு நீலவேணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மேளதாள ஊர்லலத்துடன் தேரில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் 10மணியளவில் பக்தர்களின் பராசக்தி, ஓம் சக்தி கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து மாடவீதி வழியாக இழுத்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் மாலை 4 மணிக்கு ராதா திருக்கல்யாணம் நடந்தது. தவிர இன்று மாலை 3 மணிக்கு கொடியிறக்கம், 4 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.