திருவள்ளூர், நவ.18: நாளை முதல் வருகின்ற 25ம் தேதி வரை தேசிய மதநல்லிணக்க கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மதநல்லிணக்க கொடி நாள் பிரசார இயக்க வாரம் 19.11.2023 (நாளை) முதல் 25.11.2023 வரை நடைபெறும். இதில், பொதுமக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டையும் மற்றும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில், தேசிய மதநல்லிணக்க பிரசார வாரத்தில் அனாதை குழந்தைகள், சமூகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்விற்கு உதவும் வகையில், தேசிய மதநல்லிணக்க கொடிநாள் நிதியினை வழங்கலாம். இதற்கு வருமான வரியிலிருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது என இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.