நாயுடன் ‘வாக்கிங்’ சென்ற பெண் இன்ஜினியரிடம் போதையில் சில்மிஷம் செய்ய முயன்ற எஸ்ஐக்கு அடிஉதை: கோபத்தில் பொங்கி எழுந்த பொதுமக்கள் அதிரடி

சோழிங்கநல்லூர்: மெரினா கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற பெண் இன்ஜினியரிடம் குடிபோதையில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை எஸ்ஐ ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இதனால், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராணி (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பிரபல நிறுவனத்தில் ஐடி இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 11.10 மணிக்கு மெரினா கடற்கரையில் தனது செல்ல நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கடற்கரையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், திடீரென ராணியிடம் ‘உங்கள் நாய் அழகாக இருக்கிறது. எந்த வகையை சேர்ந்த நாய்’ என்று கேட்டுள்ளார். அதற்கு ராணி பதில் அளிக்க முயன்றபோது, திடீரென போதை ஆசாமி ராணியின் கையை பிடித்து, அவர் மீது விழுந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி, உடனே உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு கடற்கரையில் இருந்த பொதுமக்கள் போதை ஆசாமியை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து ராணி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன்படி, மயிலாப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று போதை ஆசாமியை பொதுமக்களிடம் இருந்து மீட்டார். பொதுமக்கள் தாக்கியதில் போதை ஆசாமிக்கு உதட்டில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், போதையில் இருந்ததற்கான மருத்துவ தகுதி சான்று பெற ரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானது.

பின்னர், போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, கே.கே.நகர் ஒன்றிய அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த சரவணன் (54) என்றும், இவர் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் என்றும், பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் குடிபோதையில் இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட இளம் பெண் இதுதொடர்பாக புகார் அளிக்காததால் அவரிடம் புகார் பெற்று போலீசார் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி