நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் காட்டுப் பன்றியை வேட்டையாட

பெரணமல்லூர், ஜூன் 20: பெரணமல்லூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த மோட்சவாடி பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று மாலை இரண்டு மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் வந்து இறங்கி உள்ளனர். அவர்கள் ஏரியின் ஒரு பகுதியில் இறங்கி கையோடுகொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு, கறி வெட்டும் கத்தி, காஸ் ஸ்டவ், சிலிண்டர், காஸ் லைட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வெளியே வைத்துள்ளனர். அப்போது, அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சிலர் இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த மர்ம நபர்களை இப்பகுதியில் இதுவரை பார்த்ததில்லையாம். உடனே பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பெரணமல்லூர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சம்பத் மற்றும் போலீசார் உடனடியாக அப்பகுதி மக்கள் கூறிய ஏரி பகுதிக்கு சென்றபோது, அங்கு இருந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். பின்னர் போலீசார் அவர்கள் விட்டு சென்ற பைக், ஸ்கூட்டர் மற்றும் நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் ஒரு கைப்பையில் தப்பி ஓடிய நபர்களின் ஆதார் கார்டு கிடைக்கவே அதன் மூலம் போலீசார் விசாரணையில் தப்பி ஓடிய நபர்கள் போளூர் பகுதியைச் சேர்ந்த அமீர்(31), பாண்டியன்(35) என தெரியவந்தது. இவர்கள் காட்டுப்பன்றியை வெளியிடத்தில் வேட்டையாடி இங்கு வந்து அவற்றை கூறு போட்டு விற்பதற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான இருவர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை