நாகர்கோவிலில் இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் சென்ற 3 அரசு பஸ் திடீர் நிறுத்தம்

சாத்தான்குளம் ஜூன் 26: நாகர்கோவிலில் இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் சென்ற 3 அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நாகர்கோவில், குளச்சல், திங்கள்நகர் உள்ளிட்ட பணிமனையில் இருந்து வள்ளியூர், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் அதிகாலை தொடங்கி இரவு வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து செல்லும் வகையில் இயக்க்கப்படுகிறது. இதன் மூலம் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமில்லாமல் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்புகின்றனர்.

இந்நிலையில் திங்கள்நகர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த 2 பஸ், குளச்சல் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட ஒரு பஸ் என 3 பஸ்கள், கடந்த 1 மாதத்திற்கு மேலாக இயக்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் நாகர்கோவிலில் இயக்கப்பட்டு சாத்தான்குளத்திற்கு அதிகாலை 4.30 மணி, காலை 10 மணி வந்த பஸ்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில நேரங்களில் 5 பஸ்கள் வரை ஒரே நேரத்தில் வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொண்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை உடனடியாக இயக்கிட வேண்டும் என்றும், இல்லை எனில் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் இருந்து நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்பட்ட நேரத்தில் திருச்செந்தூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்