நகைக்கடையில் இரவு காவலாளி மர்மச்சாவு போலீசார் விசாரணை

குடியாத்தம், ஜன.8: குடியாத்தம் நகரில் உள்ள நகைக்கடையில் இரவு காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொச்சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராஜ்(55). இவர் குடியாத்தம் நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பீமராஜ் பணிக்கு வந்தார். அவருடன் மற்றொரு இரவு காவலாளியும் பணியில் இருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு 3வது மாடியில் கண்காணிப்புக்காக பீமராஜ் மாடிப்படி ஏறிச்சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த மற்றொரு காவலாளி, 3வது மாடிக்கு சென்று பார்த்தபோது, பீமராஜ் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி, இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் மர்மச்சாவு என வழக்கு பதிந்து, பீமராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை