செங்கல்பட்டு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சராசரியாக 49.64 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66.82 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று காலை 7மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடந்தது. காலை முதலே பொதுமக்கள் மந்தமாகவே வாக்களித்தனர். 6 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு அதிகபட்சமாக 83 சதவீதம், நகராட்சியில் அதிகபட்சமாக 75 சதவீதம், தாம்பரம் மாநகராட்சியில் 42.33 சதவீத வாக்குகள் பதிவாயின. மாவட்டத்தின் 6 பேரூராட்சிகள் நிலவரம்:அச்சிறுப்பாக்கம் 79.81, கருங்குழி 83.42, இடைக்கழிநாடு 79.58, திருக்கழுக்குன்றம் 80.53, திருப்போரூர் 80.21, மாமல்லபுரம் 80.80 என பேரூராட்சிகளில் சராசரியாக 80.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நகராட்சிகளில் செங்கல்பட்டு 60.30, மதுராந்தகம் 75.78, நந்திவரம் கூடுவாஞ்சேரி 54.34, மறைமலைநகர் 63.91 சதவீதம் என நகராட்சிகளில் மொத்தம் சராசரியாக 62.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தாம்பரம் மாநகராட்சியில் மாவட்டத்திலேயே மிகக்குறைவாக 42.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சியில் சராசரியாக 49.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடந்தது. இதில் 66.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று பகல் 1 மணி அளவில் சுமார் 40 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக, மநீம, சுயேட்சைகள் என 808 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் இறுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 64.25 சதவீதம், மாங்காடு நகராட்சியில் 69.68, குன்றத்தூர் நகராட்சியில் 68.07, பெரும்புதூர் பேரூராட்சியில் 69.08, உத்திரமேரூர் பேரூராட்சியில் 76.05, வாலாஜாபாத் பேரூரட்சியில் 77.06 சதவீத வாக்குகள் பதிவாயின.மொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 66.82 சதவீதம் வாக்குகள் பதிவாகின….