கோவை, செப்.20: கோவை மாநகராட்சியில் எம்ஜிஆர் காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், ராமர் கோயில் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், காந்திபுரம் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்களை பராமரிக்க நடப்பாண்டிற்கு சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, உரமாக்கும் பணிக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் சில இடங்களில் காய்கனி, குப்பைகள் குவிக்கப்படுகிறது.
குறிப்பாக அழுகிய பழம், காய்கனிகளை தூக்கி வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை முறையாக சேகரிக்க தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும். மார்க்கெட் வளாகத்திற்குள் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. மாடுகள் மேய விடாமல் தடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்னர். நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் கழிவுகள் குவிந்துள்ளது. இவற்றை தினமும் அகற்ற வேண்டும். ஞாயிறு தினங்களில் மாஸ் கிளீனிங் பணி நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.