பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் சி காலனியை சேர்ந்தவர் இப்ராகிம் சுல்தான் (25). சிவில் இன்ஜினியர். இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு சூளேஸ்வரன்பட்டியில் உள்ள காலனி பள்ளி வாசலில் தொழுகைக்கு சென்றார். பின் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.1.15 லட்சம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து இப்ராகிம் சுல்தான் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது கேசவபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (69). இவர் தனது மனைவி தனலட்சுமியுடன், கடந்த 27ம் தேதி அதிகாலையில், வீட்டை பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். பின் நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்தும் கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். தொழுகை மற்றும் கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….