பண்ருட்டி ஜூன், 4: பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூலி தொழிலாளி. இவரது மகன் நடராஜன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(33). கார் டிரைவர். இவரது மனைவி உஷா சமீபத்தில் காணாமல் போயிருந்தார். தனது மனைவியை நடராஜன் அழைத்து சென்றிருப்பதாக கூறி வெங்கடேசன் வீட்டிற்கு அடிக்கடி சென்று உங்கள் மகன் எங்கே போயிருக்கிறான் என்று கேட்டு தமிழரசன் தகராறு செய்துள்ளார். இதேபோல நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் வீட்டிற்கு சென்ற தமிழரசன் அங்கு தகராறில் ஈடுபட்டு வெங்கடேசன் வீட்டில் இருந்த கேமரா, பேன், கதவு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சூறையாடி அங்கிருந்த வெங்கடேசனை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தமிழரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.