திண்டிவனம், மே 27: திண்டி வனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள நல்லாம்பாக்கம் கிராமத்தில் தனஞ்செழியன் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்திரி ஏழுமலை என்பவர் பணி முடித்து விட்டு மதியம் ஒரு மணி நேர உணவு இடைவேளையில் சிமெண்ட் மூட்டையுடன் நின்றிருந்த டிராக்டரின் பின்புறம் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது டிராக்டர் உரிமையாளர் மாசிலாமணி டிராக்டர் டிப்பரை கழட்டி விடுவதற்கு எழுந்திருக்க சொன்னபோது ஏழுமலை ஒன்றும் ஆகாது டிப்பரை கழட்டிவிடு என்று கூறியுள்ளார். இதையடுத்து டிராக்டர் உரிமையாளர் டிப்பரை கழட்டியவுடன் ஒரு டன் சிமெண்ட் மூட்டையுடன் டிப்பர் ஏழுமலை மீது பின்பக்கமாக சாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு காரணமான மாசிலாமணியை கைது செய்யக் கோரி நேற்று காலை ராஜாம்பாளையத்தில் திண்டிவனம்-மரக்காணம் செல்லும் சாலையில் ஏழுமலையின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.