தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது எப்படி?

தஞ்சாவூர், ஏப்.12: கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் மட்டும் அல்லாது, திறந்த வெளியிலும் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைத்து அதில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா குறையத் தொடங்கியதையடுத்து சகஜ நிலைக்கு திரும்பின. கொரோனாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக சிகிச்சை மையங்களும் அகற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.

மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, துணை கண்காணிப்பாளர் முகமது இத்திரிஸ், கொரோனோ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பரந்தாகன் மற்றும் பணியாளர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா நோயாளி ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டால் அவரை எப்படி கையாள்வது, பரிசோதனைகள் மேற்கொள்வது, சிகிச்சை அளிப்பது, மருந்துகள் கொடுப்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாராவது வந்தால் அனுமதிக்கும் வகையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு அங்கு 10 படுக்கைகளும் போடப்பட்டுள்ளன. தற்போது வரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது