குடியாத்தம், ஜூன் 16: குடியாத்தம் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 11 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சவுந்தர், சங்கர், சத்திர நாராயணன் ஆகியோர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் மேய்சலுக்கு ஆடுகளை கல்லப்பாடி காப்பு காட்டுக்கு மேய்ச்சலுக்கு பிடித்துச் சென்றனர். பின்னர் மாலை ஆடுகளை கொட்டகைக்குள் கட்டினர். அப்போது சத்திய நாராயணன் விட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மாலை ஆடுகள் தண்ணீர் குடித்துள்ளது. சற்று நேரத்தில் 11 ஆடுகள் மயக்கம் அடைந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பரதராமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.