தொட்டியம், செப். 6: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு மனைவி தப்பிஓடி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தலைமலை அடிவார பகுதியில் உள்ள ஒத்தரசு கிராமத்தை சேர்ந்த சிக்கன் மகன் புஷ்பராஜ் (43). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மல்லிகா(44). புஷ்பராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக மது அருந்திவிட்டு வந்து மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகன் தமிழ்ச்செல்வன் (20) வேலைக்கு சென்றதை அறிந்த புஷ்பராஜ் வீட்டில் இருந்த மனைவி மல்லிகாவிடம் போதையில் நேற்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகா தனது கணவன் புஷ்பராஜை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தொட்டியம் போலீசார், புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புஷ்பராஜ் மகன் தமிழ்ச்செல்வன் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மல்லிகாவை தேடி வருகின்றனர்.