திருவாடானை : திருவாடானை அருகே கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டிருந்தது தாசில்தார் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.திருவாடானை அருகே வலையன் வயல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நெல்வயல்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், மங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலையில் வயல்வெளியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மேலும் சில இடங்களில் மண் மூட்டைகள் கொண்டு அடைத்து வைத்திருந்தனர். அவற்றையும் அகற்றினர். ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை கண்மாய் பகுதிக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் தப்பியது. இப்பணியில் வருவாய் ஆய்வாளர் கேசவன், கிராம நிர்வாக அலுவலர் குமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா ஆகியோர் ஈடுபட்டனர்….