கரூர், ஜூலை 19: கரூரில், முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணையை 22ம்தேதிக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 நீதிபதி பரத்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டார். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் (ஜூலை 16) கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.
தொடர்ந்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜாமின் கேட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கேட்ட நீதிபதி பரத்குமார், ஜாமீன் மீதான விசாரணையை ஜூலை 22ம்தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.