பல்லாவரம்: தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் காட்சியளித்தார். சென்னை மாங்காடு பகுதியில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் கோயிலில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் ஆரவாரமின்றி அமைதியாக நேற்று மாலை 6 மணிக்கு 3 நாள் தெப்பத்திருவிழா தொடங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் கலந்துகொள்ள கோயில் அலுவலர்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி தெப்பத்திருவிழா அமைதியாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாங்காடு கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்….