மதுரை: தேவரின் தங்கக்கவசத்தை எடப்பாடி தரப்பிடம் வழங்க ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விசாரணை 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை அண்ணாநகர் வங்கியில் உள்ள தேவரின் தங்கக்கவசத்தை எடுத்துச் செல்ல தன்னை அனுமதிக்குமாறும், வங்கிக்கணக்கை அதிமுக சார்பாக பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வீ.பவானி சுப்பராயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் தரப்பு மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், ‘‘ பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தங்கக்கவசத்தை மனுதாரர் தரப்பிடம் கொடுக்கக் கூடாது. வழக்கம் போல எங்களிடம் தான் வழங்க வேண்டும்’’ என்றார். தேவர் நினைவிட பொறுப்பாளர் மற்றும் வங்கி தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி நடக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்….