புதுடெல்லி: கடந்த 2019-20ம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.276.45 கோடியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி உள்ளன. இதில், பார்தி ஏர்டெல் குழுமத்தின் புருடென்ட் அறக்கட்டளை ரூ.217.75 கோடி, ஜன்கல்யாண் அறக்கட்டளை ரூ.45.95 கோடி, ஏ.பி.ஜெனரல் அறக்கட்டளை ரூ.9 கோடி, சமாஜ் அறக்கட்டளை ரூ.3.75 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கி உள்ளன.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.58 கோடி மட்டுமே தேர்தல் நிதி கிடைத்தது. புருடென்ட் ரூ.31 கோடி, ஜன்கல்யாண் ரூ.25 கோடி, சமாஜ் அறக்கட்டளை ரூ.2 கோடி வழங்கி உள்ளன. நாடு முழுவதும் 35 மாநில கட்சிகள் நன்கொடை பெற்ற விபரங்களை தாக்கல் செய்துள்ளன. இதன்படி, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ரூ.130.46 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா ரூ.111.4 கோடி, ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.92.7 கோடி நிதி திரட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது….