திருமலை: தெலங்கானாவில் சரக்கு வேன் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் சில்லர்கி கிராமத்தை சேர்ந்தவர் சவுதர்பள்ளி மாணிக்கம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். இதையொட்டி அவரது உறவினர்கள் சுமார் 25 பேர் நேற்று 3ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றனர். அதன்பிறகு அனைவரும் மாலையில் மீண்டும் ஊர் திரும்பினர். நிஜான்சாகர் மண்டலத்தில் உள்ள ஹாசன்பள்ளி கேட் பகுதியில் சென்றபோது வேன், அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேன் டிரைவர் சைலு (25), லச்சவ்வா(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வேன் நொறுங்கியது. இந்த இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பான்ஸ்வாடா மற்றும் எல்லாரெட்டி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அஞ்சவ்வா(40), வீரமணி(38), சாயவ்வா(40), வீரவ்வா(70), கங்காமணி(45), எல்லையா(45), போச்சய்யா (44) ஆகியோர் இறந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எல்லாரெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேன் டிரைவர் வேகமே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….