சென்னை, மார்ச் 23: தென்சென்னை மக்களுக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினேன், என்று அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. இதில், வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் பேசியதாவது:
2014-2019ல் நான் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தென்சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 150 எம்எல்டி கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வர திட்டம் வகுத்தேன். இதற்காக, மத்திய நகர்ப்புற துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை நேரில் சந்தித்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி வழங்க கோரிக்கை விடுத்தேன்.
அதன்படி, நிதி பெறப்பட்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மிகவும் பாதித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தென்சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர், வேளச்சேரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.