தூத்துக்குடி, அக். 1: கோரம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், அந்தோனியார்புரம் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். மாநகராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலை பறிபோகும். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும். எங்கள் பகுதியில் வாடகைக்கு குடியிருப்போரே அதிகம். மாநகராட்சியானால் வாடகை உயரும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் ஊராட்சியை, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.