தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை

 

தூத்துக்குடி, செப் 11: தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி கேடிசி நகர் எட்டயபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து(52). தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் போர்க் லிப்ட் ஆப்பரேட்டராக பணியாற்றி வரும் இவர் கடந்த 8ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றார்.

பின்னர் நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த தங்கநகை, வெள்ளி பொருட்கள் மற்றும் வெண்கல பொருட்கள், விலை உயர்ந்த வாட்சுகள் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிப்காட் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த எஸ்ஐ சிவராஜா மற்றும் போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்