ஊட்டி, மே 8: ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1959ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 65 ஆண்டுகள் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அன்னக்கிளி, தும்மனட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, நாக்குப்பெட்டா நலச்சங்க தலைவர் பாபு மற்றும் ஊர் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவரும், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான கப்பச்சி வினோத், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியை அமுதவல்லி, கனரா வங்கி மேலாளர் முகுந்தன், முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவர் சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, நிகழ்ச்சியின் போது 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்தது.
விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துவது, தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பட்டதாரி ஆசிரியர்கள் பீமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் யசோதா தொகுத்து வழங்கினார். இதில், ஏராளமான முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.