மீனம்பாக்கம்: துபாயிலிருந்து பிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா (40) என்ற பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். சுங்கத்துறைக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது, முகமது அப்துல்லா முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் சற்றுவித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அவரது மாஸ்க்கை கழற்றி சோதித்தனர். அதனுள் 85 கிராம் தங்க பேஸ்ட்டை ஒட்டி வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.3 லட்சம். அதோடு அவருடைய பையில் ஐபோன்கள், லேப் டாப்களும் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.8.13 லட்சம். மொத்தம் ரூ.11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், எலக்ட்ராணிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக அணியும் மாஸ்க்கிற்குள் நூதனமான முறையில் தங்கம் கடத்தி வந்த பயணி முகமது அப்துல்லாவை கைது செய்து விசாரிக்கின்றனர்….
துபாயிலிருந்து சென்னைக்கு முகக்கவசத்தில் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்: புதுக்கோட்டை பயணி கைது
previous post